62. (நம்பிக்கையாளர்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்கள் முன்னிலையில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்கள் மெய்யாகவே நம்பிக்கையாளர்களாயிருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான் மிகவும் தகுதியுடையவர்கள் (என்பதை அறிந்துகொள்வர்).
63. எவன் உண்மையாகவே அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறானோ அவனுக்கு நிச்சயமாக நரகத்தின் நெருப்புதான் கிடைக்கும். அதில் அவன் (என்றென்றும்) தங்கிவிடுவான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வில்லையா? இதுதான் மகத்தான இழிவாகும்.
64. நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தியாயம் அருளப்பட்டு அது தங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை வெளிப்படுத்திவிடுமோ என்று பயப்படுகி(ன்றவர்களைப் போல் நயவஞ்சகர்கள் நடித்து பரிகசிக்கின்)றனர். (நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறும்: ‘‘நீங்கள் பரிகசித்துக் கொண்டே இருங்கள். ஆயினும், நீங்கள் பயப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் வெளியாக்கியே தீருவான்.''
65. (இதைப் பற்றி) நீங்கள் அவர்களைக் கேட்பீராயின் ‘‘விளையாட்டுக்காக நாங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தோம்'' என்று அவர்கள் கூறுவார்கள். அதற்கு (நபியே! அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகசிக்கிறீர்கள்?'' என்று நீர் கேட்பீராக.
66. நீங்கள் (செய்யும் விஷமத்தனமான பரிகாசத்திற்கு) வீண் புகழ் கூற வேண்டாம். நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிச்சயமாக (அதை) நிராகரித்துவிட்டீர்கள். ஆகவே, உங்களில் ஒரு கூட்டத்தினரை நாம் மன்னித்த போதிலும் மற்றொரு கூட்டத்தினர் நிச்சயமாக குற்றவாளிகளாகவே இருப்பதனால், நாம் அவர்களை வேதனை செய்தே தீருவோம் (என்றும் நபியே! நீர் கூறுவீராக.)
67. ஆணாயினும் பெண்ணாயினும் நயவஞ்சகர்கள் அனைவரும் ஒரே இனத்தவரே! அவர்கள் (அனைவருமே) பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டுவார்கள்; நன்மையான காரியங்களைத் தடை செய்வார்கள். (செலவு செய்ய அவசியமான சமயங்களில்) தங்கள் கைகளை மூடிக்கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆதலால், அல்லாஹ்வும் அவர்களை மறந்து விட்டான். நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் தான் (சதி செய்யும்) கொடிய பாவிகள்.
68. நயவஞ்சகரான ஆண்களுக்கும் பெண்களுக்கும் (அவ்வாறே மற்ற) நிராகரிப்பவர்களுக்கும் நரக நெருப்பையே அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். அதுவே அவர்களுக்குப் போதுமா(ன கூலியா)கும். இன்னும், அல்லாஹ் அவர்களை சபித்தும் இருக்கிறான். மேலும், அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு.