3.31. மறுமைநாளில் ஒவ்வொருவரும் தான் செய்த செயல்களை எவ்வித குறைவுமின்றி தன் முன்னால் காண்பார்கள். தீய செயல்கள் புரிந்தவர்கள் அவர்களுக்கும் அந்த செயல்களுக்குமிடைய நீண்ட காலத்தொலைவு இருக்கக்கூடாதா என்று ஏங்குவார்கள். ஆனால் அது எங்கே நிறைவேறப்போகிறது! அல்லாஹ் தன்னைக் கொண்டு உங்களை எச்சரிக்கிறான். எனவே பாவங்களில் உழன்று அவனுடைய கோபத்திற்கு ஆளாகிவிடாதீர்கள். அல்லாஹ் தன் அடியார்கள்மீது பரிவுடையவனாக இருப்பதனால்தான் அவர்களுக்கு அவன் எச்சரிக்கை செய்கிறான்.
3.32. தூதரே! நீர் கூறுவீராக: “நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வை நேசித்தால் நான் கொண்டு வந்ததை உள்ளும் புறமும் பின்பற்றுங்கள். நீங்கள் அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவீர்கள். அவன் உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் தன் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்கள் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
3.33. தூதரே நீர் கூறுவீராக: “அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் இதனைப் புறக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ் தன் கட்டளைக்கும், தன் தூதரின் கட்டளைக்கும் மாறாகச் செயல்படும் நிராகரிப்பாளர்களை அவன் விரும்ப மாட்டான்.
3.34. அல்லாஹ் ஆதமைத் தேர்ந்தெடுத்து, வானவர்களை அவருக்குச் சிரம்பணியுமாறு செய்தான். நூஹைத் தேர்ந்தேடுத்து, பூமியில் அனுப்பப்படும் முதல் தூதராக ஆக்கினான். இப்ராஹீமின் குடும்பத்தினரையும் தேர்ந்தெடுத்தான். அவரது சந்ததிகளில் தூதுத்துவத்தை நிலைக்கச் செய்தான். இம்ரானின் குடும்பத்தினரையும் தேர்ந்தெடுத்தான். அல்லாஹ் இவர்கள் அனைவரையும் தேர்ந்தெடுத்து அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தின் மேன்மக்களாக ஆக்கினான்.
3.35. மேலேகூறப்பட்ட தூதர்களும் அவர்களின் வழியைப் பின்பற்றிய அவர்களின் சந்ததிகளும் அல்லாஹ் ஒருவனை வணங்குவதில், நற்செயல்கள் புரிவதில் ஒருவர் மற்றவரைச் சார்ந்தவர்கள்தாம். அவர்கள் நற்குணத்தையும் சிறப்புகளையும் ஒருவர் மற்றவரிடமிருந்து பெற்றார்கள். அல்லாஹ் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன்; அவர்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன். அதனால் தான் அவர்களில் தான் நாடியோரைத் தேர்ந்தெடுக்கிறான்.
3.36. தூதரே! பின்வரும் சம்பவத்தை நினைவுகூருங்கள்: மர்யமின் தாயாகிய இம்ரானின் மனைவி கூறினார்: “என் இறைவா, வேறு எதுவும் செய்யாது உனக்கும் உன்வீட்டிற்கும் பணிவிடைசெய்வதற்காகவே என் வயிற்றிலுள்ள சிசுவை உனக்காக நான் நேர்ச்சை செய்துள்ளேன். எனவே என்னிடமிருந்து எனது இந்தச் செயலை ஏற்றுக் கொள்வாயாக.” நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவியேற்கக்கூடியவன்; என் எண்ணத்தை நன்கறிந்தவன்.
3.37. கர்ப்ப காலம் நிறைவடைந்தபோது அவள் தன் வயிற்றிலுள்ளதைப் பெற்றெடுத்தாள் - அவள் ஆண்குழந்தையை எதிர்பார்த்திருந்தாள் - அப்போது அவள், “என் இறைவா! நான் பெண்குழந்தையைப் பெற்றெடுத்து விட்டேனே!” என்றாள். அவள் என்ன குழந்தையைப் பெற்றெடுத்தால் என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன். எதிர்பார்த்த ஆண் ஆற்றலிலும் தோற்றத்திலும் அவர்களுக்குக் கிடைத்த பெண்ணைப் போலல்ல. “நான் அதற்கு மர்யம் என்று பெயர் சூட்டினேன். உன் அருளை விட்டும் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து நான் இந்த குழந்தைக்கும் இந்த குழந்தையின் சந்ததிகளுக்கும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்றும் அவள் கூறினாள்.
3.38. அவளது நேர்ச்சையை அல்லாஹ் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அந்தக் குழந்தையை நல்லமுறையில் வளரச் செய்தான். அவனது நல்லடியார்களின் உள்ளங்களை அந்தக் குழந்தை மீது அன்புகொள்ளச்செய்தான். மர்யமுக்கு ஸகரிய்யாவை பொறுப்பாளராக்கினான். ஸகரிய்யா மர்யமின் தொழுமிடத்திற்குச் செல்லும்போதெல்லாம் அங்கு தூய்மையான உணவைக் காண்பார். அவளிடம் கேட்பார், “மர்யமே இந்த உணவு உனக்கு எங்கிருந்து கிடைத்தது?” அதற்கு மர்யம் கூறுவாள், “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த உணவாகும். அவன் தான் நாடியவர்களுக்கு கணக்கின்றி தாராளமாக வழங்குகிறான்.
التفاسير:
من فوائد الآيات في هذه الصفحة:
• عظم مقام الله وشدة عقوبته تجعل العاقل على حذر من مخالفة أمره تعالى.
1. அல்லாஹ்வின் மகத்துவமும் அவன் வழங்கும் தண்டனையின் கடுமையும், அறிவாளியை அவனுடைய கட்டளைக்கு மாறுசெய்வதை விட்டும் எச்சரிக்கையாக வாழவைக்கிறது.
• برهان المحبة الحقة لله ولرسوله باتباع الشرع أمرًا ونهيًا، وأما دعوى المحبة بلا اتباع فلا تنفع صاحبها.
2. உண்மையாகவே அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிப்பது என்பது அவனுடைய மார்க்கத்தை ஏவலாலும் விலக்கலாலும் பின்பற்றுவதேயாகும். அதைவிடுத்து வாயளவில் மட்டும் அவனை நேசிக்கிறோம் என்று கூறுவதால் எந்தப் பயனும் இல்லை.
• أن الله تعالى يختار من يشاء من عباده ويصطفيهم للنبوة والعبادة بحكمته ورحمته، وقد يخصهم بآيات خارقة للعادة.
3. அல்லாஹ், தனது ஞானம் அருளுக்கேற்ப அடியார்களில் தான் நாடியவர்களை தூதுத்துவத்திற்காக, வணக்க வழிபாட்டிற்காக தேர்ந்தெடுக்கிறான். சிலவேளை வழக்கத்திற்கு மாறான அற்புதங்களை பிரத்யேகமாக அவர்களுக்கு வழங்குகிறான்.