8.70. நபியே! பத்ருப் போரில் உம்மிடம் அகப்பட்ட கைதிகளிடம் கூறுவீராக: “உங்கள் உள்ளங்களில் நல்லெண்ணம் இருப்பதை அல்லாஹ் அறிந்தால் உங்களிடமிருந்து பெறப்பட்ட பிணைத் தொகையைவிட சிறந்த நன்மைகளை உங்களுக்கு அளிப்பான். எனவே உங்களிடமிருந்து பெறப்பட்ட பிணைத் தொகைக்காக கவலைப்படாதீர்கள். அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். அல்லாஹ்வின் இந்த வாக்குறுதி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நபியவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் மற்றும் ஏனையவர்கள் விஷயத்திலும் நிறைவேறியது.
8.71. -முஹம்மதே!- உம்மிடம் வெளிப்படுத்தும் இந்த வார்த்தைகளின் மூலம் உமக்கு துரோகமிழைக்க அவர்கள் விரும்பினால், இதற்கு முன்னால் அவர்கள் அல்லாஹ்வுக்கு துரோகமிழைத்து விட்டார்கள். அவர்களுக்கு எதிராக அல்லாஹ் உமக்கு உதவி செய்துள்ளான். அவர்களில் சிலர் கொல்லப்பட்டார்கள். சிலர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டார்கள். அவர்கள் மீண்டும் அவ்வாறு செய்தால் இதையே எதிர்பார்க்கட்டும். அல்லாஹ் தன் படைப்புகளையும் அவற்றுக்கு நன்மையளிக்கக்கூடியவற்றையும் நன்கறிவான். தன் நிர்வாகத்தில் அவன் ஞானம்மிக்கவன்.
8.72. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு, அவனுடைய தூதரை உண்மைப்படுத்தி, அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டு, நிராகரிப்பாளர்கள் வாழும் நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டினை நோக்கி அல்லது அல்லாஹ்வை அமைதியாக வணங்க முடியுமான இடத்தை நோக்கி புலம்பெயர்ந்து, தங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்வதற்காக ஜிஹாது செய்தவர்களும் தங்களில் வீடுகளில் அவர்களைத் தங்க வைத்து அவர்களுக்கு உதவி புரிந்தவர்களும் உதவி செய்வதில் ஒருவருக்கொருவர் தோழர்களாக இருக்கின்றார்கள். -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு ஆனால் இஸ்லாமிய நாட்டினை நோக்கி புலம்பெயராதவர்கள், அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயரும் வரை அவர்களுக்கு உதவிபுரிவதோ பாதுகாப்பு அளிப்பதோ உங்கள் மீது கடமையில்லை. நிராகரிப்பாளர்கள் அவர்கள் மீது அநீதி இழைத்து அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் அவர்களின் எதிரிகளுக்கு எதிராக அவர்களுக்கு உதவி புரியுங்கள். ஆனால் உங்களுக்கும் அவர்களின் எதிரிகளுக்கும் அவர்கள் மீறாத ஏதேனும் ஒப்பந்தம் இருந்தாலே தவிர. நீங்கள் செய்யக் கூடியவற்றை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். உங்களின் செயல்கள் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
8.73. அல்லாஹ்வை நிராகரிப்பவர்களை நிராகரிப்பு ஒன்றிணைக்கிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் தோழர்களாக இருக்கின்றார்கள். நம்பிக்கையாளன் அவர்களுடன் நட்பு கொள்வதில்லை. நீங்கள் நம்பிக்கையாளர்களுடன் தோழமை கொண்டு நிராகரிப்பாளர்களுடன் பகைமை பாராட்டவில்லையெனில் அது நம்பிக்கையாளர்களுக்கு சோதனையாக அமைந்து விடும். அவர்கள் தங்களுக்கு உதவி செய்யக்கூடிய மார்க்க சகோதரர்களைப் பெறமாட்டார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதன் மூலம் உலகில் பெரும் குழப்பம் நிகழும்.
8.74. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனுடைய பாதையில் புலம்பெயர்ந்தவர்களும் அல்லாஹ்வின் பாதையில் முஹாஜிர்களுக்கு தங்க இடமளித்து உதவி செய்தவர்களுமே உண்மையில் ஈமான் எனும் பண்பைக் கொண்டு வர்ணிக்கத்தக்கவர்கள். அல்லாஹ் அவர்களுக்கு வழங்கும் கூலி அவர்களின் பாவங்களை மன்னித்து சொர்க்கம் என்னும் கண்ணியமான வெகுமதியை வழங்குவதாகும்.
8.75. முஹாஜிர்களிலும் அன்சாரிகளிலும் இஸ்லாத்துக்கு முந்தியவர்களுக்குப் பின்னால் நம்பிக்கை கொண்டவர்களும் நிராகரிப்பாளர்கள் வாழும் நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டை நோக்கி புலம்பெயர்ந்தவர்களும் அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்து நிராகரிப்பாளர்களின் வாக்கை தாழ்த்துவதற்காக அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்தவர்கள்- நம்பிக்கையாளர்களே! - இவர்களும் உங்களைச் சார்ந்தவர்களே. உங்களுக்குள்ள உரிமைகளும் கடமைகளும் அவர்களுக்கும் உள்ளன. முன்னர் இருந்தது போன்று ஈமான் மற்றும் ஹிஜ்ரத்தின் மூலம் அனந்தரம் பெறுவதை விட அல்லாஹ்வின் சட்டத்தில் அனந்தரம் பெற மிகத் தகுதியானவர்கள் இரத்த உறவுகளே. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. தன் அடியார்களுக்கு நன்மையளிக்கக் கூடியதை அறிந்து, அவர்களுக்கு அவன் சட்டங்களை வழங்குகிறான்.
التفاسير:
من فوائد الآيات في هذه الصفحة:
• يجب على المؤمنين ترغيب الأسرى في الإيمان.
1. போரில் பிடிபட்ட கைதிகளுக்கு ஈமானின்பால் அழைப்பு விடுப்பது நம்பிக்கையாளர்கள் மீது கடமையாகும்.
• تضمنت الآيات بشارة للمؤمنين باستمرار النصر على المشركين ما داموا آخذين بأسباب النصر المادية والمعنوية.
2. நம்பிக்கையாளர்கள் வெற்றிக்கான வெளிரங்க மற்றும் மறைமுக காரணிகளைக் கடைப்பிடிக்கும் வரை நிராகரிப்பாளர்களுக்கு எதிரான வெற்றி தொடரும் என்ற நற்செய்தியை வசனங்கள் தாங்கி வந்துள்ளன.
• إن المسلمين إذا لم يكونوا يدًا واحدة على أهل الكفر لم تظهر شوكتهم، وحدث بذلك فساد كبير.
3. நிராகரிப்பாளர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒற்றுமையாக செயல்படவில்லையெனில் முஸ்லிம்களின் பலம் குன்றி பெரும் குழப்பம் ஏற்பட்டுவிடும்.
• فضيلة الوفاء بالعهود والمواثيق في شرعة الإسلام، وإن عارض ذلك مصلحة بعض المسلمين.
4. இஸ்லாமிய மார்க்கத்தில் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது சிறப்புக்குரியதாகும், அது சில முஸ்லிம்களின் நலன்களுக்கு எதிரானதாக இருந்தாலும் சரியே.