48.10. -தூதரே!- மக்காவின் இணைவைப்பாளர்களுடன் போரிடுவோம் என்று உம்மிடம் பைஅது ரிழ்வானில் உறுதிமொழி அளித்தவர்கள் அல்லாஹ்விடமே உறுதிமொழி அளித்தவர்களாவர். ஏனெனில் அவன்தான் இணைவைப்பாளர்களுடன் போரிடும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டான். அவனே அவர்களுக்குக் கூலியளிப்பான். உறுதிமொழியின்போது அவர்களின் கைகளுக்கு மேல் அல்லாஹ்வின் கை இருந்தது. அவன் அவர்களைக்குறித்து நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. யாரேனும் உறுதிமொழியை மீறி அவனது மார்க்கத்திற்கு உதவி செய்வதாக வழங்கிய வாக்குறுதியை, உடன்படிக்கையை முறித்து அதனை நிறைவேற்றவில்லையோ அவ்வாறு வாக்குறுதியை, உடன்படிக்கையை முறித்ததனால் ஏற்படும் தீங்கு அவரையே சாரும். அதனால் அல்லாஹ்வுக்கு எந்த தீங்கும் ஏற்படப்போவதில்லை. யாரெல்லாம் அவனது மார்க்கத்திற்கு உதவி செய்வதாக வழங்கிய உறுதிமொழியை முழுமையாக நிறைவேற்றினார்களோ அல்லாஹ் அவர்களுக்கு சுவனம் என்னும் மகத்தான கூலியை வழங்கிடுவான்.
48.11. -தூதரே!- உம்முடன் மக்காவுக்கு போருக்குப் புறப்படாமல் அல்லாஹ் பின்தங்க வைத்த நாட்டுப்புற அரபிகளில் சிலரை நீர் கண்டித்தால் “எங்கள் செல்வங்களையும் பிள்ளைகளையும் பராமரிப்பது உம்முடன் புறப்படுவதைவிட்டும் எங்களைத் திருப்பிவிட்டன. எனவே எங்களின் பாவங்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக” என்று அவர்கள் உம்மிடம் கூறுவார்கள். அவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாதவற்றை தூதரிடம் பாவமன்னிப்புக் கோருமாறு வேண்டி தம் நாவினால் கூறுகிறார்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புக் கோரவில்லை. நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ் உங்களுக்கு நன்மையளிக்க நாடினாலோ அல்லது தீங்கிழைக்க நாடினாலோ யாராலும் அதனைத் தடுக்க முடியாது. மாறாக நீங்கள் செய்பவற்றை அவன் நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் அவை எவ்வளவுதான் மறைத்தாலும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
48.12. நீங்கள் கூறுவது போல் செல்வங்களையும் பிள்ளைகளையும் பராமரிப்பதில் ஈடுபட்டமை, அவருடன் நீங்கள் புறப்படாமல் பின்தங்குவதற்கான காரணமல்ல. மாறாக தூதரும் அவருடைய தோழர்கள் அனைவரும் அழிந்துவிடுவார்கள், மதீனாவில் தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிவர மாட்டார்கள் என்ற எண்ணமே அதற்குக் காரணமாகும். இவ்வாறு எண்ணுவதை ஷைத்தான் உங்களின் உள்ளங்களில் அலங்கரித்துக் காட்டி விட்டான். இறைவன் தன் தூதருக்கு உதவிசெய்ய மாட்டான் என்று அவனைக்குறித்து தீய எண்ணம் கொண்டீர்கள். அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் கொண்ட தீய எண்ணம் மற்றும் அவனுடைய தூதரைவிட்டும் பின்தங்கிய காரணத்தால் நீங்கள் அழியக்கூடிய மக்களாகி விட்டீர்கள்.
48.13. யார் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொள்ளவில்லையோ அவர் நிராகரிப்பாளராவார். நாம் மறுமை நாளில் நிராகரிப்பாளர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நெருப்பை தயார்படுத்தி வைத்துள்ளோம். அதில் அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள்.
48.14. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் தான் நாடிய அடியார்களின் பாவங்களை மன்னிக்கிறான். அவர்களை தன் அருளால் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்கிறான். தான் நாடிய அடியார்களை தன் நீதியால் தண்டிக்கிறான். அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
48.15. -நம்பிக்கையாளர்களே!- ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பிறகு அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்த கைபரின் போர்ச் செல்வங்களை நீங்கள் பெறுவதற்காக புறப்பட்டால் அல்லாஹ் யாரை பின்தங்கச் செய்தானோ அவர்கள் கூறுவார்கள்: “நாங்களும் அதிலிருந்து பங்கைப் பெற உங்களுடன் புறப்படுவதற்கு எங்களுக்கு அனுமதியளியுங்கள்.” பின்தங்கிய இவர்கள் இவ்வாறு வேண்டுவதன் மூலம் நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே கைபரின் போர்ச்செல்வங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதியை மாற்ற விரும்புகிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறும்: “இந்த போர்ச் செல்வங்களுக்காக நீங்கள் எங்களை ஒருபோதும் பின்தொடராதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் கைபரின் போர்ச் செல்வங்களை ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கலந்துகொண்டவர்களுக்காக மட்டும் உரித்தாக்கி விட்டான். அவர்கள் கூறுவார்கள்: “கைபருக்கு உங்களைப் பின்தொடர வேண்டாம் என நீங்கள் எம்மைத் தடுப்பது அல்லாஹ்வின் கட்டளையினால் அல்ல. மாறாக எங்கள்மீதுள்ள பொறாமையே காரணமாகும்.” பின்தங்கிய இவர்கள் கூறுவது போலல்ல விடயம். மாறாக அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளையும் அவன் தடுத்துள்ளவற்றையும் குறைவாகவே புரிந்துகொள்பவர்களாக இருக்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் பாவத்தில் வீழ்ந்து விட்டார்கள்.
التفاسير:
من فوائد الآيات في هذه الصفحة:
• مكانة بيعة الرضوان عند الله عظيمة، وأهلها من خير الناس على وجه الأرض.
1. பைஅத்துர் ரிள்வான் என்னும் உடன்படிக்கை அல்லாஹ்விடத்தில் உயர்ந்த மதிப்பைப் பெற்றதாகும். அதில் கலந்து கொண்டவர்கள் பூமியிலுள்ள மக்களில் மிகச் சிறந்தவர்கள் ஆவர்.
• سوء الظن بالله من أسباب الوقوع في المعصية وقد يوصل إلى الكفر.
2. அல்லாஹ்வைப் பற்றி தீய எண்ணம் கொள்வது பாவத்தில் வீழ்வதற்கான காரணங்களில் ஒன்றாகும். சில வேளை நிராகரிப்புக்கும் வழிவகுக்கும்.
• ضعاف الإيمان قليلون عند الفزع، كثيرون عند الطمع.
3. பலவீனமான நம்பிக்கையாளர்கள் சிரமமான சமயங்களில் குறைவானவர்களாகவும் மகிழ்ச்சியான சமயங்களில் அதிகமானவர்களாகவும் இருப்பார்கள்.