30.42. -தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “பூமியில் சுற்றித் திரிந்து உங்களுக்கு முன்னர் பொய்ப்பித்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவர்களின் முடிவு மோசமானதாக இருந்தது. அவர்களில் பெரும்பாலானோர் அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்கி அவர்களை வணங்குபவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்வுக்கு இணைவைத்ததன் காரணமாக அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
30.43. -தூதரே!- மறுமை நாள் வருவதற்கு முன்னரே எவ்வித கோணலுமற்ற நேரான மார்க்கமான இஸ்லாத்தின்பால் உம்முகத்தை திருப்பிக் கொள்வீராக. அந்த நாள் வந்துவிட்டால் அதனைத் தடுக்கக்கூடியவர் யாருமில்லை. அந்த நாளில் மக்கள் பலவாறாகப் பிரிந்து விடுவார்கள். ஒரு பிரிவினர் சுவனத்தில் இன்பம் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். மற்றொரு பிரிவினர் நரகத்தில் வேதனைக்குள்ளாக்கப்படுவார்கள்.
30.45. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவன் விரும்பும் நற்செயல்கள் புரிந்தவர்களுக்கு தன் அருள் மற்றும் உபகாரத்திலிருந்து கூலி வழங்குவதற்காக. அவன் தன்னையும் தன் தூதர்களையும் நிராகரிப்பவர்களை விரும்புவதில்லை. மாறாக அவர்களை மிகவும் வெறுக்கிறான். மறுமை நாளில் அவர்களை வேதனைக்குள்ளாக்குவான்.
30.46. அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய மகத்தான சான்றுகளில் ஒன்று, அவன் காற்றை மழை வருவதற்கான நற்செய்தியாக அடியார்களுக்கு அனுப்புவதாகும். -மனிதர்களே!- இது மழையின் பின் ஏற்படும் செழிப்பு, சந்தோசம் என்பவற்றின் மூலம் அவனது அருளை நீங்கள் சுவைக்க வேண்டும் என்பதற்காகவும் கடலில் அவனுடைய நாட்டப்படி கப்பல்கள் செல்ல வேண்டும் என்பதற்காகவும் கடல் வியாபாரத்தின் மூலம் நீங்கள் அவனுடைய அருளை தேடிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான். அவன் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றிசெலுத்துவதன் மூலம் அதனை அவன் உங்களுக்கு அதிகரிக்கலாம்.
30.47. -தூதரே!- உமக்கு முன்னால் பல தூதர்களை நாம் அவர்களின் சமூகங்களின்பால் அனுப்பியுள்ளோம். அவர்கள் தங்களின் நம்பகத்தன்மையை அறிவிக்கக்கூடிய சான்றுகளோடு அந்த மக்களிடம் வந்தார்கள். ஆயினும் அவர்கள் தூதர்கள் கொண்டுவந்ததை பொய்ப்பித்தார்கள். தீய செயல்கள் புரிந்தோரை நாம் தண்டித்தோம். நம் வேதனையால் அவர்களை அழித்துவிட்டோம். தூதர்களையும் அவர்கள் மீது நம்பிக்கைகொண்டவர்களையும் நாம் அழிவிலிருந்து காப்பாற்றினோம். நம்பிக்கையாளர்களைக் காப்பாற்றி உதவி செய்வது நாம் நம் மீது விதித்துக் கொண்ட கடமையாகும்.
30.48. அல்லாஹ்வே காற்றுகளை இழுத்துவந்து அனுப்புகிறான். அவை மேகங்களைத் தூண்டி நகர்த்தி விடுகின்றன. பின்னர் தான் நாடியவாறு குறைவாகவோ, அதிகமாகவோ வானத்தில் அவற்றைப் பரப்பி துண்டு துண்டாக்கி விடுகிறான். -பார்க்கக்கூடியவரே!- அந்த மேகத்துக்கு மத்தியிலிருந்து மழை பொழிவதை நீ காண்கின்றாய். அவன் தான் நாடிய அடியார்களின் மீது மழை பொழியச் செய்தால் அல்லாஹ்வின் அருளான மழையைக் கொண்டும் அதனைத் தொடர்ந்து தமக்கும் தமது கால்நடைகளுக்கும் தேவையானவற்றை பூமி விளையச் செய்வதைக் கொண்டும் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
30.50. -தூதரே!- அல்லாஹ் தன் அடியார்களின் மீது அருள்புரியும் பொருட்டு பொழிவிக்கும் மழையின் தாக்கத்தினால் ஏற்படும் பயன்களையும் அதன் மூலம் எவ்வாறு அவன் வறண்ட பூமியை பல்வேறு தாவரங்களை முளைக்கச் செய்வதன் மூலம் உயிர்ப்பிக்கிறான் என்பதையும் பார்ப்பீராக. நிச்சயமாக வறண்ட இந்த பூமியை உயிர்ப்பித்தவனே இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிப்பவன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனுக்கு முடியாததல்ல.
التفاسير:
من فوائد الآيات في هذه الصفحة:
• إرسال الرياح، وإنزال المطر، وجريان السفن في البحر: نِعَم تستدعي أن نشكر الله عليها.
1. காற்றை அனுப்புவது, மழையை இறக்குவது, கடலில் கப்பல்களைச் செல்ல வைப்பது ஆகியவை நன்றி செலுத்தப்பட வேண்டிய அல்லாஹ்வின் அருட்கொடைகளாகும்.
• إهلاك المجرمين ونصر المؤمنين سُنَّة إلهية.
2. குற்றவாளிகளை அழிப்பதும் நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வதும் இறைவனின் வழிமுறையாகும்.
• إنبات الأرض بعد جفافها دليل على البعث.
3. பூமி வரண்ட பின் உயிர்ப்பிப்பது மீண்டும் எழுப்புவதற்கான ஆதாரமாகும்.