24.28. நீங்கள் அந்த வீடுகளில் யாரையும் பெறவில்லையெனில் வீட்டு உரிமையாளரினால் உங்களுக்கு அனுமதியளிக்கப்படும்வரை அவற்றில் நுழையாதீர்கள். வீட்டின் உரிமையாளர்கள் உங்களை ‘திரும்பிச் செல்லுங்கள்’ என்று கூறினால் நீங்கள் திரும்பிச் சென்றுவிடுங்கள். அவற்றில் நுழைந்துவிடாதீர்கள். நிச்சயமாக அதுதான் அல்லாஹ்விடத்தில் உங்களுக்குத் தூய்மையானதாகும். நீங்கள் செய்யக்கூடியதை அல்லாஹ் நன்கறிந்தவன். நீங்கள் செய்யும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
24.29. நூலகங்கள், சந்தையிலுள்ள உணவகங்கள் போன்ற பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள, யாருக்கும் சொந்தமில்லாத பொது இடங்களில் நீங்கள் அனுமதியின்றி நுழைவதில் குற்றமில்லை. நீங்கள் வெளிப்படுத்தும் உங்களின் செயல்களையும், நிலைமைகளையும், நீங்கள் மறைப்பதையும் அல்லாஹ் அறிவான். அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
24.30. -தூதரே!- நம்பிக்கைகொண்ட ஆண்களிடம் நீர் கூறுவீராக: “அவர்களுக்கு பார்ப்பதற்குத் தகாத அந்நியப் பெண்கள் மற்றும் மறைவிடங்களை பார்க்காமல் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தடைசெய்யப்பட்டதில் ஈடுபடாமலும், வெளிப்படாமலும் தங்களின் வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். அல்லாஹ் தடுத்தவற்றைப் பார்க்காமல் தவிர்ந்திருப்பதும் மர்மஸ்தானத்தைப் பாதுகாப்பதும் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்குத் தூய்மையானதாகும். நிச்சயமாக அவர்கள் செய்யக்கூடியதை அல்லாஹ் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.”
24.31. நம்பிக்கைகொண்ட பெண்களிடம் நீர் கூறுவீராக: “அவர்களுக்கு பார்ப்பதற்கு அனுமதியில்லாத மறைவிடங்களைப் பார்ப்பதை விட்டும் தமது பார்வைகளைத் தடுத்துக் கொள்ளட்டும். மானக்கேடான காரியங்களை விட்டு விலகி மறைவாக இருப்பதன் மூலம் தங்களின் வெட்கத்தலங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும். ஆடை போன்ற மறைக்க முடியாத தானாக வெளிப்படுபவற்றைத் தவிர அந்நிய ஆண்களுக்கு முன்னால் அவர்கள் தங்களின் அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம். தங்களின் முடி, முகம், கழுத்து ஆகிய பகுதிகளை மறைப்பதற்காக முந்தானைகளால் தங்கள் ஆடைகளின் மேல் பகுதியின் இடைவெளிகளை மூடிக்கொள்ளட்டும். தங்களின் மறைவான அலங்காரத்தை பின்வரும் நபர்களுக்கே அன்றி அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்: “கணவன்மார்கள், தந்தையர், கணவன்மார்களின் தந்தையர், தங்களின் பிள்ளைகள், கணவன்மார்களின் பிள்ளைகள், தங்களின் சகோதரர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள், தங்கள் சகோதரிகளின் பிள்ளைகள், நம்பகத்தன்மையுடைய முஸ்லிமான மற்றும் நிராகரிக்கும் பெண்கள், தங்களின் ஆண் பெண் அடிமைகள், பெண்களின் மீது நாட்டமில்லாத ஆண்கள், பெண்களின் மறைவிடங்களைப் பற்றி அறியாத குழந்தைகள். பெண்கள் தாம் மறைத்து வைத்திருக்கும் சலங்கை போன்ற அழகுகள் அறியப்பட வேண்டும் என்ற நோக்கில் தமது கால்களை தரையில் அடித்துக்கொண்டு நடக்க வேண்டாம். -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் அனைவரும் உங்களால் நிகழ்ந்த பார்வை மற்றும் ஏனைய விடயங்களில் இருந்து அல்லாஹ்வின் பக்கம் திரும்பி விடுங்கள். அதனால் நீங்கள் பயப்படும் விடயத்திலிருந்து விடுதலையடைந்து எதிர்பார்த்ததை பெற்று வெற்றியடையலாம்.
التفاسير:
من فوائد الآيات في هذه الصفحة:
• جواز دخول المباني العامة دون استئذان.
1. பொது இடங்களில் அனுமதியின்றி நுழையலாம்.
• وجوب غض البصر على الرجال والنساء عما لا يحلّ لهم.
2. ஆண்களும், பெண்களும் தங்களுக்கு அனுமதியில்லாதவற்றை விட்டும் பார்வையைத் தாழ்த்துவது அவசியமாகும்.
• وجوب الحجاب على المرأة.
3. பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயமாகும்.
• منع استخدام وسائل الإثارة.
4. இச்சைகளைத் தூண்டும் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்தல்.