8. என்ன, (இம்மனிதர்) ‘‘அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறுகிறாரோ அல்லது அவருக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறதோ'' (என்று அவர்களிடம் கூறுகின்றனர்.) மாறாக. எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்கள்தான் பெரும் வேதனையிலும், வெகு தூரமானதொரு வழிகேட்டிலும் இருக்கின்றனர்.
9. வானத்திலும் பூமியிலும் அவர்களுக்கு முன்னும் பின்னும் இருப்பவற்றை அவர்கள் கவனிக்கவில்லையா? நாம் விரும்பினால் அவர்களைப் பூமிக்குள் சொருகிவிடுவோம் அல்லது வானத்திலிருந்து சில துண்டுகளை அவர்கள் மேல் எறிந்து (அவர்களை அழித்து) விடுவோம். (அல்லாஹ்வையே) நோக்கி நிற்கும் ஒவ்வொரு அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
10. மெய்யாகவே நாம் நம் புறத்திலிருந்து தாவூதுக்கு பெரும் அருள் புரிந்தோம். மலைகளே! பறவைகளே! ‘‘ நீங்கள் அவருடன் (சேர்ந்து) துதி செய்யுங்கள்'' (என்றும் கட்டளையிட்டோம்). மேலும், அவருக்கு இரும்பை (மெழுகைப் போல்) மென்மையாக்கித் தந்தோம்.
11. மேலும், (சங்கிலி) வளையங்களை செய்து (அவற்றை முறைப்படி) ஒழுங்காக இணைத்து போர்ச்சட்டை செய்யவும் (என்று கட்டளையிட்டதுடன் அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் நோக்கி) ‘‘நீங்கள் நற்செயல்களையே செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நான், நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன்'' (என்றோம்).
12. மேலும், ஸுலைமானுக்கு காற்றை வசப்படுத்தித் தந்தோம். அதன் காலைப் பயணம் ஒரு மாத தூரமும், அதன் மாலைப் பயணம் ஒரு மாத தூரமுமாக இருந்தது. இன்னும், செம்பை ஊற்று (நீரை)ப் போல் நாம் அவருக்கு (உருகி) ஓடச்செய்தோம். தன் இறைவனுடைய கட்டளைப்படி அவருக்கு வேலை செய்யக்கூடிய ஜின்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்து (அவருக்கு கட்டுப்பட்டு நடப்பதில்) அவர்களில் எவன் நம் கட்டளையைப் புறக்கணிக்கிறானோ அவனை நரக வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்றோம்).
13. ஸுலைமான் விரும்பிய மாளிகைகளையும், சிலைகளையும், (பெரிய பெரிய) தண்ணீர்த் தொட்டிகளைப் போன்ற பெரும் கொப்பரைகளையும், அசைக்க முடியாத பெரிய (பெரிய) ‘தேகு' (சமையல் பாத்திரங்)களையும் அவை செய்து கொண்டிருந்தன. (அவருடைய குடும்பத்தினரை நோக்கி) ‘‘தாவூதுடைய சந்ததிகளே ! இவற்றுக்காக நீங்கள் (நமக்கு) நன்றி செலுத்திக் கொண்டிருங்கள்'' (என்று கட்டளையிட்டோம்). எனினும், என் அடியார்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சொற்பமே ஆவார்கள்.
14. ஸுலைமானுக்கு நாம் மரணத்தை விதித்தபொழுது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் சாய்ந்திருந்த தடியை அரித்து விட்ட பூச்சியைத் தவிர (மற்ற எவரும்) அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. (அவர் சாய்ந்திருந்த தடியைக் கரையான் பூச்சிகள் அரித்து விட்டன. ஆகவே, அதன் மீது சாய்ந்திருந்த ஸுலைமான் கீழே விழுந்துவிட்டார்.) அவர் கீழே விழவே (வேலை செய்து கொண்டிருந்த) அந்த ஜின்களுக்கு தாங்கள் மறைவான விஷயங்களை அறியக் கூடுமாக இருந்தால் (இரவு பகலாக உழைக்க வேண்டிய) இழிவு தரும் இவ்வேதனையில் தங்கி இருக்க மாட்டோம் என்று தெளிவாகத் தெரிந்தது.